வள்ளலாரின் சைவநெறியில், கருணீகர் மக்களால், கருணீகர் மக்களுக்காக, கருணீகர் மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட சமூக நலச்சங்கம் தான் "கருணீகர் சங்கம் - தாம்பரம்". "கருணீகர் குரல்" பத்திரிகை நம் சங்கத்தின் குறிக்கோளை அடையவும் செயல்களை நடைமுறைப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு சாதனம். நம் கருணீகர் குலமக்களின் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் எழுச்சிக்கு வழிவகுக்கவும், ஏற்ற தாழ்வற்ற கருணீகர் சமூகம் ஏற்படவும், நலிந்தோர் மேம்படவும் செயல்படுவதே நம் சங்கத்தின் தலையாய கோட்பாடு.
கருணீகர் சங்கம் தாம்பரம் உருவாக்கியுள்ள இந்த இணைய தளத்திற்கு வருகை புரியும் அனைவருக்கும் வணக்கம். அன்பே உருவமாய் அருளே வடிவமாய் இந்த மண் உலகினில் உயிர்கள் எல்லாம் வருந்தும் வருத்தத்தைப் போக்கவும், அகத்தே கருத்து புறத்தே வெளுத்திருக்கும் மக்கள் அனைவரையும் இவ்வுலகில் வழிநடத்த இறைவனால் வருவிக்க உற்றவர் திருவருட்பிரகாச வள்ளலார்.
அன்றைய தென்னாற்காடு மாவட்டம் இன்றைய கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மருதூர் என்ற ஊரில் 05-10-1823 ஆம் வருடம் தமிழ் சுபானு வருடம் புரட்டாசி மாதம் 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சித்திரை நட்சத்திரத்தில் பிறந்து முத்திரைப் பதிக்க வந்தவர் வள்ளலார். இவரது இயற்பெயர் இராமலிங்கம்.